(ஏயெஸ் மெளலானா, யூ.கே.காலிதீன்)
டெங்கு கட்டுப்பாட்டு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (16) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு தினம் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைவாகவே கல்முனையிலும் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் ஆலோசனை, வழிகாட்டலில்
காலை 6.00 மணி தொடக்கம் மாநகர சபைக்குட்பட்ட 04 சுகாதார வலயங்களிலும் உள்ள பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட பல இடங்களில் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் மாநகர சபையின் பிரதான அலுவலக வளாகம், பழைய கட்டிடத் தொகுதி வளாகம், பொது நூலகங்கள் மற்றும் மாநகர சபையின் கீழ் உள்ள பொது இடங்களும் மாநகர சபை உத்தியோகத்தர்களினால் சிரமதானம் செய்யப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டன.
மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என்.பரமேஸ்பர வர்மன், சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவ மேற்பார்வையாளர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இவ்வேலைத் திட்டத்திற்கு பிரதேச சுகாதார வைத்திய பணிமனைகள், பொலிஸ் உள்ளிட்ட சில அரச திணைக்களங்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தன.
0 Comments